Saturday, October 22, 2005

கங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்

இதுவரை நடந்த விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இல்லாவிட்டால், இங்கே சுருக்கமாக...

இந்திய அணித்தலைவராக இருந்த சவுரவ் கங்குலி சில மாதங்களாக மோசமாக விளையாடி வந்தார். அதையொட்டி அவர் அணியில் தொடர்வாரா என்ற கேள்வி இருந்துவந்தது. ஜான் ரைட் அணியின் பயிற்சியாளராக ஓய்வுபெற்ற பிறகு அணிப்பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆஸ்திரேலியாவின் கிரேக் சாப்பல். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின்போது சாப்பலுக்கும் கங்குலிக்கும் இடையில் கருத்துமோதல். சாப்பல் கங்குலியின் மோசமான விளையாட்டை மனத்தில் வைத்து முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னிச்சையாக விலகி மொஹம்மத் காயிஃப், யுவ்ராஜ் சிங் ஆகிய இருவருக்கும் விளையாட வாய்ப்புகளைக் கொடுக்கலாமே என்று கங்குலியிடம் சொன்னதாகக் கேள்வி. இதை ஏற்க மறுத்த கங்குலி தான் விளையாடியதோடு மட்டுமில்லாமல், காயிஃபை விளையாடும் குழுவில் சேர்த்துக்கொள்ளவில்லை. பின் தான் ஒரு சதம் அடித்ததும், வெளிப்படையாக தனக்கும் சாப்பலுக்கும் இடையே உள்ள பிரச்னையைப் பற்றி இதழாளர்களிடம் பேசினார் கங்குலி.

தொடர்ந்து கங்குலிக்கும் சாப்பலுக்கும் இடையேயான பிளவு ஓரளவுக்கு ஒட்டு போடப்பட்டது. ஆனால் சாப்பல் கங்குலியிடம் உள்ள குறைகளை பக்கம் பக்கமாக எழுதி பிசிசிஐக்கு மின்னஞ்சல் செய்துள்ளார்! பிசிசிஐ ஒரு கூறுகெட்ட நிர்வாகம். அங்கு புரொஃபஷனல் என்று யாரும் கிடையாது. இப்பொழுதைய அலுவலகம் கொல்கொத்தாவில் உள்ளது. அங்கு வேலை செய்பவர்களுக்கு இந்திய கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை விட தாதா கங்குலி மீதுதான் ஆர்வம். எனவே ஒரு கான்பிடென்ஷியல் மின்னஞ்சல் பகிரங்கப்படுத்தப்படுகிறது. புகைச்சல் பெரு நெருப்பாகிறது.

அணியிலும் பிளவு. ஹர்பஜன் கங்குலிக்கு ஆதரவாகப் பேசுகிறார். யுவ்ராஜ் சாப்பலுக்கு ஆதரவாக. கங்குலி, சாப்பல் இருவரையும் பிசிசிஐ வரவழைத்து, பேசி, ஒத்துப்போகச் சொல்கிறது. ஆனால் பிசிசிஐ - கூறுகெட்ட நிர்வாகம் - தனக்குள்ளே பெரும் பிரச்னையில் உள்ளது. சென்ற முறை தால்மியா இல்லாத தகிடுதத்தங்களைச் செய்து நிர்வாகத் தேர்தலில் ஷரத் பவாரைத் தோற்கடித்து தன் ஆசாமி ரன்பீர் சிங் மஹேந்திராவைக் கொண்டுவந்தார். இம்முறையும் ஏகப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள், சச்சரவுகள். இதைத்தவிர நடக்க இருக்கும் இந்தியா-இலங்கை ஆட்டங்களுக்கான தொலைக்காட்சி உரிமத்தை விற்றாகவில்லை. (பின் பிரசார் பாரதிக்கு விற்கப்பட்டது.)

திடீரென கங்குலி தனக்கும் டெண்டுல்கருக்கு நேர்ந்ததுபோல முட்டிக்கையில் வலி என்கிறார் ("டென்னிஸ் எல்போ"). தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டித்தொடர்களுக்கு திராவிட் அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதலிரண்டு ஆட்டங்களுக்கு கங்குலி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அணித்தேர்வு முடிந்ததும், கங்குலியின் டென்னிஸ் எல்போ காற்றில் கரைந்து மறைகிறது. துலீப் கோப்பை ஆட்டத்தில் கிழக்குப் பிராந்திய அணிக்காக விளையாடும் கங்குலி வடக்குப் பிராந்தியத்துக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல சதம் ஒன்றை அடிக்கிறார்.

----

இதுவே முன்கதைச் சுருக்கம். இனி? மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் கங்குலி தேர்ந்தெடுக்கப்படலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இலங்கை, தென்ன்னாப்பிரிக்கா இரண்டுடனுமான போட்டித்தொடர்கள் முடிந்ததும் மீண்டும் அணித்தலைவர் தேர்வுக்கு போட்டி வரும். கங்குலியைப் பற்றி நாம் அறிந்த வகையில் அவர் வெற்றுக்காக்கவேனும் போராடும் குணமுடையவர். பிளிண்டாஃப் சட்டையைக் கழற்றினார் என்பதற்காக லண்டனில் சட்டையைக் கழற்றிக் கொண்டாடியவர். சாப்பல் தன்னை விலகச் சொன்னார் என்பதற்காக இதழாளர்களுக்குப் பேட்டி கொடுத்தவர். இப்பொழுது தன்னை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியிருப்பதைக் கண்டு கொதித்துப் போயிருப்பவர். எனவே அணித்தலைமைக்குப் போட்டியிடுவார். அதற்காகக் காய் நகர்த்துவார். அதற்கு தால்மியாவின் துணையிருக்கும். சாப்பலின் துணையிருக்காது. திராவிடின் நிலைமை கஷ்டமானது. கங்குலி திராவிடைத் தன் எதிரியாகப் பார்ப்பார். வேறு வழியில்லை.

இதனால் திராவிடின் ஆட்டமும் பாதிக்கப்படும். கங்குலியை விட திராவிட் இந்தியாவுக்கு முக்கியமானவர்.

என்ன செய்யலாம்?

1. திராவிடை அடுத்த மூன்று வருடங்களுக்கு அணித்தலைவராக இப்பொழுதே அறிவிக்கலாம். அதற்குத் தகுதியானவர். அணிக்கு அதிக உபயோகமானவர்.

2. டெண்டுல்கர்! இவரை மீண்டும் அணித்தலைவராக்கலாம். இத்தனை நாள்கள் கழித்து மீண்டும் உள்ளே வரும் டெண்டுல்கர் முதிர்ச்சியடைந்திருப்பார். தன்னை விட நன்றாக ஆடும் சிலர் அணியில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருப்பார். இவரது முந்தைய அணித்தலைமையின்போது அணி முழுவதுமாக இவரது முதுகில் இருந்தது. ஒவ்வொரு முறை அணி தோற்கும்போதும் அதனால் டெண்டுல்கர் மீதான அழுத்தம் அதிகமானது. இப்பொழுது அப்படியல்ல. டெண்டுல்கர் அணித்தலைவராக ஆனால் கங்குலி முதல் திராவிட் வரை அனைவரும் அவர் சொல் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கங்குலி மீண்டும் அணித்தலைவராக வருவது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவரது கேப்டன்சி புள்ளிவிவரங்களை தயவுசெய்து யாரும் முன்வைக்க வேண்டாம். எனக்கு இந்தப் புள்ளிவிவரங்கள் நன்றாகவே தெரியும்.

கங்குலி இந்தியாவின் ஒருநாள் அணியில் பங்கேற்கலாம். இன்னமும் இரண்டு வருடங்கள் அவர் விளையாடலாம். அவரை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. யுவ்ராஜ், காயிஃப் என்று தொடங்கி இன்னமும் பலர் உள்ளனர்.

இதையெல்லாம் மீறி கங்குலி அணித்தலைவர் பதவிக்காகப் புகுந்து விளையாடினால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் மோசமாக இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும்.

முக்கியமான ஒன்று பாக்கி இருக்கிறது. ஆனால் அது இப்பொழுதைக்கு நடக்காது. பிசிசிஐ நிர்வாகத்தை முற்றிலுமாகச் சீரமைக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home