Friday, October 28, 2005

மொஹாலி ஆட்டம்

மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெகு சுலபமாக வெற்றி பெற்றுள்ளது.

திடீரென இலங்கையின் ஆட்டத்தில் ஒரு சுணக்கம். பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியில்லை. அத்துடன் அதிர்ஷ்டமும் இல்லை. திராவிட் மீண்டும் டாஸில் ஜெயித்து, இம்முறை பந்து வீசத் தீர்மானித்தார். இது பகல்-இரவு ஆட்டம். மொஹாலி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சற்றே ஆதரவானது. ஆனாலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாகப் பந்து வீசினால்தான் பிரயோஜனம். ஆனால் இந்திய அணித் தேர்வில் சிறிது குழப்பம். கேரளாவின் ஸ்ரீசந்த் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்றே எதிர்பார்த்தேன். அவர் சூப்பர்-சப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஹர்பஜன், முரளி கார்த்திக் இருவரும் அணியில் இருந்தனர்.

ஸ்ரீசந்துக்கான தேவை ஏதும் இருக்கவில்லை. இர்ஃபான் பதான் அற்புதமாகப் பந்து வீசினார். முதல் ஓவரிலேயே ஆபத்தான ஜெயசூரியா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை வெட்டி ஆட, பந்து வானில் பறந்து டீப் தர்ட்மேனில் நின்றுகொண்டிருந்த சேவாகிடம் கேட்ச் ஆனது. ஜெயசூரியா ரன்கள் ஏதும் பெறவில்லை. கேப்டன் அட்டபட்டு சிறிது தடுமாற்றத்துடன் விளையாடி, அகர்கரின் அவுட்ஸ்விங் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஜயவர்தனே-சங்கக்கார ஜோடி நிலைமையைச் சரி செய்திருக்கலாம். ஆனால் ஜயவர்தனே கால் திசையில் வந்த ஒரு பந்தை ஃப்ளிக் செய்யப் போய், ஸ்கொயர் லெக்கில் நின்ற வேணுகோபால ராவிடம் எளிதான கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதானுக்கு இரண்டாவது விக்கெட்.

சங்கக்கார தடையேதும் இன்றி சில நல்ல ஷாட்களை அடித்தார். ஆனால் பதானை அரங்கை விட்டுத் தூக்கி அடிக்கப் போய், மிட் ஆனுக்கு எளிமையான கேட்சைக் கொடுத்தார். டெண்டுல்கர் பிடித்தார். அடுத்த பந்திலேயே ஓர் இன்ஸ்விங்கிங் யார்க்கர் - புதிதாக உள்ளே வந்த திலகரத்னே தில்ஷனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியாக 13வது ஓவரில் 54/5 என்ற நிலையில் இருந்தது இலங்கை.

பதான் நன்றாகவே பந்து வீசினார். முக்கியமாக அவர் எடுத்த நான்காவது விக்கெட். அவருக்குக் கிடைத்த மன்ற மூன்று விக்கெட்டுகளுமே ஓசி விக்கெட்டுகள் வகையைச் சார்ந்தவை. அகர்கர் எடுத்தது ஒரு நல்ல விக்கெட். ஆக ஐந்தில் இரண்டுதான் நல்ல பந்து வீச்சினால் கிடைத்தது. எனவே அணியின் மோசமான நிலைக்கு முன்னணி மட்டையாளர்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம். இந்நிலையிலிருந்து மீள்வது கடினம், வெகு சில அணிகளால் மட்டுமே அது முடியும்.

திராவிட் ஐந்தாவது பவுலரான ஜெய் பிரகாஷ் யாதவையும் ஹர்பஜன் சிங்கையும் பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். யாதவ் ரன்கள் ஏதும் தராமல் பந்து வீசினார். ஹர்பஜன் தன் இரண்டாவது ஓவரிலேயே ஆர்னால்டை அவுட் செய்தார். மிட்விக்கெட் திசையை நோக்கி பந்தின் ஸ்பின்னுக்கு எதிராக ஷாட் விளையாடினார் ஆர்னால்ட். பந்து விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப் திராவிட் கையில் கேட்ச் ஆனது. 71/6. தேவையே இல்லாத ஒரு ரன் அவுட் மூலம் வாஸ் ஆட்டத்தை இழந்தார். 80/7.

மிகவும் மெதுவாக ஊர்ந்து ரன்கள் பெற்ற இலங்கை யாதவின் ஓர் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை - மஹரூஃப், சோய்ஸா - இழந்தனர். முரளிதரன் வந்து கொஞ்சம் பேட்டைச் சுழற்றி மூன்று பவுண்டரிகள் அடித்தார். பின் அவரும் ஹர்பஜன் சிங்கின் ஓர் ஆஃப் பிரேக்கில் ஏமாந்து அவுட்டானார். 122 ஆல் அவுட்.

"ரோடு சரியில்ல, என்னோட கார் நாலு தடவ பம்ப்பர் மாத்த வேண்டியிருந்துச்சு, எங்கப் பாத்தாலும் ஏழைங்க, கரண்டு இல்ல, தண்ணிப் பிரச்னை... ஏன் இந்த அரசாங்கம் ஒண்ணுமே செய்ய மாட்டேங்கறாங்க..."

"அடச்சீ வாய மூடு, நீ ஒன்னோட வருமான வரிய ஒழுங்கா கட்டினியா?"

(பயப்படாதீங்க, ரேடியோல நடு நடுவுல வந்த விளம்பரம்... அதனால இன்னிங்ஸ் மாறரப்ப நம்ம பதிவுலயும் அந்த விளம்பரத்தப் போட்டேன்.)

123 ரன்கள் அடிப்பது மிகச்சாதாரண விஷயம். சேவாகும் டெண்டுல்கரும் ஒரு மார்க்கமாகத்தான் வந்தனர். சேவாக் நான்காவது ஓவரில், சோய்ஸாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 (புல், மிட்விக்கெட்), 6 (ஹூக், ஃபைன் லெக்), 4 (கட், பேக்வர்ட் பாயிண்ட்) என்று அடித்தார். அடுத்த வாஸ் ஓவரில் டெண்டுல்கர் 4 (ஆன் டிரைவ், மிட்விக்கெட்), 4 (கவர் டிரைவ்), 4 (பேடில் ஸ்வீப், ஃபைன் லெக்) என்று தன் திறமையைக் காட்டினார். முரளிதரன் பந்துவீச வந்ததும் முதலிரண்டு பந்துகளில் டெண்டுல்கர் அனாயாசமாக நான்குகளை அடித்தார். முதல் பந்து தூக்கி எறியப்பட்டது, இறங்கி வந்து மிட் ஆன் தலைக்கு மேலாக லாஃப்ட் செய்தார். அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து தூஸ்ரா - ஸ்பின் ஆகாமல் - நேராகச் சென்றது, அதை கவர் திசையில் அடித்தாடினார். மறு பக்கம் சேவாக் சோய்ஸாவைத் துவம்சம் செய்ய ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் குவிந்தன. பத்தாவது ஓவரில் இந்தியா 80 ரன்கள் இருக்கும் நிலையில் சேவாக் மஹரூஃப் பந்தில் பந்து வீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அத்துடன் உணவு இடைவேளை.

இடைவேளைக்குப் பிறகு இந்தியா ஜெய் பிரகாஷ் யாதவை அனுப்பியது. அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் டெண்டுல்கர் - பழைய டெண்டுல்கர் - முரளி, மஹரூஃப் இருவரையும் நான்குகள் அடித்து தன் அரை சதத்தைப் பெற்றார். அதற்குப் பின்னும் தொடர்ந்து ரன்களைச் சேர்த்தார். யாதவ் முரளியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனதும் திராவிட் பேட்டிங் செய்ய வந்தார். நான்கைந்து ஓவர்கள் அதிகமாயின, ஆனாலும் 21வது ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய வேகத்தில் சென்றிருந்தால் 16 ஓவர்களில் முடித்திருக்க வேண்டியது.

டெண்டுல்கர் ஆட்டம் ஒன்றுதான் பார்வையாளர்களுக்கு காசுக்குத் தீனி போட்டது.

மூன்றாவது ஆட்டத்திலிருந்தாவது இலங்கை அணியின் தரம் உயரும் என்று எதிர்பார்ப்போம்.

மற்ற செய்தியில் அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் கங்குலி கிடையாது என்று முடிவாகி உள்ளது. நல்ல செய்தி.

ஸ்கோர்கார்ட்

0 Comments:

Post a Comment

<< Home