Friday, October 28, 2005

ஷோயப் "Show Pony" அக்தர்

கடந்த நான்கைந்து நாள்களாக நடந்து வரும் விஷயம் இது. 'பொசுக்'கென்று போய்விடும் என்பதால் எழுதவில்லை. ஆனால் பெரிதாவது போலத்தான் தெரிகிறது.

ESPN-Star Sports சானலில் Sportscentre என்னும் விளையாட்டுச் செய்தி மடல் வருகிறது. அதில் ஷோயப் அக்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது "நாய் வாலை நிமிர்த்த முடியாது, அதைப்போல ஷோயப் அக்தரும் திருந்த மாட்டார்" என்பதாகச் செய்தி வாசிப்பவர் குறிப்பிட்டாராம்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஒழுங்கீனம் உலகறிந்தது. அவர், தான் ஓர் அணிக்கு ஆடுவதே, அந்த அணிக்குப் பெருமை சேர்ப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் அணி ஏற்பாடு செய்திருக்கும் பயிற்சி முகாம்களுக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. சர்வதெச ஆட்டங்கள் நடக்கும்போதும் கூட சரியாக ஈடுபடமாட்டார். மனதிருந்தால் வந்து பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பார். சில சமயம் கோபித்துக்கொண்டு காலில் நரம்பு இழுத்துக்கொண்டது என்று சொல்லிவிட்டு டிரெஸ்ஸிங் ரூம் போய் உட்கார்ந்து கொள்வார். இவர் இதுவரை போட்டிருக்கும் சண்டைகள் உலகறிந்தது. பிடிவாதமும் முரட்டுத்தனமும் நிரம்பிய இவர் ஓர் அணிக்கு லாபம் அல்ல, நஷ்டம். பாகிஸ்தான் அணி ஏன் இன்னமும் இவரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

மேற்படி ESPN சம்பவம் நடக்கக் காரணம் ஷோயப், பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமுக்கு சரியான நேரத்துக்கு வராமல் போனதே.

ஆனால், ஷோயப் இப்பொழுது திடீரென்று ESPN மீது வழக்கு தொடுப்பேன் என்கிறார். தன்னை 'நாய்' என்று அந்த சானல் சொன்னதாகவும், அது தன்னை அவமானப்படுத்தியது போலாகும் என்றும், இதனால் தான் மான நஷ்ட வழக்கு போடப்போவதாகவும் சொல்கிறார்.

மேலும் இதில் குட்டையைக் குழப்ப, இதனால் இந்தியா-பாகிஸ்தான் உறவுக்குக் குந்தகம் வரும் என்று வேறு முழக்கம். 'நாய்வாலை நிமிர்த்த முடியாது' என்னும் சொலவடை இந்தியா பகுதிகளில் பிரசித்தம். இதன்மூலம் எதிராளி 'நாய்' என்று யாரும் சொல்வதில்லை. எதிராளியின் குணத்தைப் பற்றி மட்டும்தான் கருத்து சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் 'incorrigible' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். "இந்தாளு திருந்தவே மாட்டான்யா" என்று சொல்வோம் அல்லவா, அதுதான்.

ஒரு நியாயமான வக்கீல், அக்தரை பணத்தை வீணடிக்காமல் இருக்கச் சொல்வார்.

0 Comments:

Post a Comment

<< Home