Tuesday, January 24, 2006

பைசலாபாத்- டிரா ?

இந்திய பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சுக்கள் பொதுவாக வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை விடுத்து, தோல்வி அடையக் கூடாது என்ற தற்காப்பு மனோபாவத்துடன் ஆடப்படுபவை என்ற கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் இரு டெஸ்ட் போட்டிகளும் விளையாடப்பட்டுள்ளன.

லாகூரைப் போல் இல்லாமல், பைசலாபாத்தில் நல்ல தட்பவெப்ப நிலை நிலவியது. கிட்டத்தட்ட 90 ஓவர்கள் தினமும் வீச முடிந்தது. ஆனாலும் முடிவு கிடைக்காதது வருத்தத்திற்குரிய விசயம். போட்டியின் ஒரே ஆறுதலான அம்சம், இரு நாட்டின் மட்டையாளர்களும் ஆடிய அதிரடி ஆட்டம். அது ஒன்றுதான் முந்தைய இந்திய பாகிஸ்தான் அறுவை டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடும் போது மாறுபட்ட சுவையான அம்சம். முன்பு இந்தியாவில் நிகழ்ந்த ஒரு டெஸ்டில் கெய்க்வாட் ஆமை வேகத்தில் ஆடி 201 ரன்கள் குவித்தார். ஆனால் தற்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டம் ஆடினார்கள்.

இந்திய அணியின் தற்போதைய சிறப்பம்சம்- நெஞ்சில் மாஞ்சா கூடியிருப்பது. லாகூர் டெஸ்ட்டில் முன்னிலை பெற இரு அணிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை.ஆனால் இங்கே இந்திய அணிக்கு முதல் நாள் முகம்மது யூசுப் ஆட்டமிழந்த போதும் (216-4), பாகிஸ்தான் அணிக்கு சச்சின் ஆட்டமிழந்த போதும் ( 281-5) வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் இன்சமாம், அப்ரிதி ஆகியோர் பாகிஸ்தானையும், தோனி, பதான் ஆகியோர் இந்தியாவையும் காப்பாற்றி விட்டார்கள். இந்த இரு ஜோடிகளிடையே, மிகவும் முக்கியத்துவம் பெறும் ஆட்டம் தோனி-பதான் ஜோடி ஆடிய ஆட்டம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகளை அலசிப் பார்த்தால் எதிரணியின் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை டாமினேட் செய்ய விட்டிருப்பது தெரியும். 83ம் வருட பாகிஸ்தான் தொடரில் இம்ரான் 40 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆனால் தற்போதைய பாக். அணியில் அக்தர் அத்தகைய ஆக்கிரமிப்பை நிகழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தோனியின் அதிரடி ஆட்டம் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கிவிட்டது.

தோனியின் சதம் சரியான ச்ந்தர்பத்தில் சரியான முறையில் எடுக்கப்பட்ட சதம். வேகமாக ரன்கள் குவித்தாலும், பொறுப்புணர்ந்து ஆடப்பட்ட ஆட்டம். முன்பு கபில்தேவ் அதிரடியாக ரன்கள் குவித்திருந்தாலும் அவருடைய ஆடும் முறையில் ஒரு "ரிஸ்க்" எப்போதும் இருக்கும். நிலைமை உணர்ந்து நிதானமாக ஆடுவது கபிலால் இயலாது. ஆனால் தோனி நிதானமாக ஆடினார். இத்தகைய அணுகு முறையை அவர் தொடர்ந்து கையாண்டால் பல சாதனைகளை புரியலாம்.

இந்தியா 5 பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததும் வரவேற்கத் தக்க அம்சம். 5 பந்து வீச்சாளர்கள் இல்லாத பட்சத்தில் 700 ரன்களை பாக் குவித்திருக்கும். ஜாகிர்கானின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர அவர் வீசும் பந்துகளும், உருவாக்கும் கோணங்களும் இந்த சொத்தை பிட்சிலும் பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றன. இன்சமாமை அவுட்டாக்கிய பந்து மிகவும் அருமை.அதே போல் யூனுஸ்கானிற்கு யுவராஜ் பிடித்த கேட்ச், முன்பெல்லாம் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே பிடிப்பார்.

அடுத்த டெஸ்டில் இன்சமாம் ஆடாவிட்டால் பாகிஸ்தானிற்கு பிரச்சனைதான். பந்து வீச்சாளர்களில் நவீத் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் ( காயம் குணமாகும் பட்சத்தில்).

கராச்சி கரைச்சலான ஊர். அங்கே இந்திய எதிர்ப்புணர்வு அதிகம். ஒருமுறை மியாண்டாட்டை மனோஜ் பிரபாகர் அவுட்டாக்கியவுடன் கத்தி கலாட்டா செய்து போட்டியையே நிறுத்தி விட்டார்கள். சென்ற தொடரை போல் இம்முறை பாக். வீரர்கள் அமைதியாக நடந்து கொள்ளவில்லை. அக்தரும், அப்ரிதியும் நிறைய வம்பிழுக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டையால் பதிலளிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் மகான் திராவிட் அடித்த சதங்களைப் பற்றி இன்னொருமுறை தனியாக எழுத வேண்டும்.

1 Comments:

Blogger பழூர் கார்த்தி said...

கபில்தேவ் மும்பையில், 'தோனி, எனது ஹீரோ' என்று கூறியுள்ளார்.. இந்திய அணிக்கு ஒரு வலுவான விக்கெட் கீப்பர் கிடைத்து விட்டார் !

அப்ரிடி இரண்டு செஞ்சுரி அடித்து விட்டதால் கொஞ்சம் துள்ளுகிறார்..
இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்கு கான் பந்துவீச்சில் அவுட்டாகியது போதாவிடில்,
அடுத்த டெஸ்ட்டில் பதான் பார்த்துக்கொள்ளூவார் :-)

3:40 AM  

Post a Comment

<< Home