Wednesday, February 01, 2006

கராச்சி டெஸ்ட்: பாக். வெற்றி முகம்

இதே தலைப்புடன் ஒரு பதிவை முதல் நாள் ஆட்ட முடிவிலே போட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் தோல்வியின் அடிப்படை- முதல் நாளே இழந்த நான்கு விக்கெட்டுக்கள் மற்றும் கம்ரான் அக்மல் அடித்த சதம். 0-3 என்ற நிலையிலிருந்து ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது பாகிஸ்தானால் மட்டுமே செய்யக் கூடிய செயல். பாக் ஆட்டக்காரர்களை போல போட்டி மனப்பான்மையும், மனதில் உறுதியும் கொண்ட ஆட்டக்காரர்களை காண்பது அரிதான செயல். அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டு குழி பறிப்பது ஒன்றுதான் அவர்களுடைய பலவீனம். அந்த பலவீனத்தை வுல்மரும், இன்சமாமும் சேர்ந்து சரி செய்து விட்டார்கள். ஒற்றுமையுடன் ஆடும் பாக்.அணி உலகின் அனைத்து அணிகளையும் வெல்லக் கூடிய தகுதி வாய்ந்தது.

இந்திய அணிக்கு அதி வேக பந்து வீச்சாளர்களை பார்த்து கூட பயமில்லை. பந்தை சீம் செய்யும் ரஜாக், ஆசிப் போன்றவர்கள் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவர்கள். சிக்கந்தர் பகத் என்ற பாக் பவுலர் டில்லியில் நடந்த டெஸ்டில் ( 81-82) எட்டு விக்கெட்டுக்கள் எடுத்தார். அதே போல்தான் அக்வீப் ஜாவேத்தும். தற்போது ஆசிப் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார்.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் மட்டையாளர்களே. முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் அதிகம் எடுத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் வெற்றிக்கு முயற்சி செய்திருக்கலாம். ஆனால் ஏழு ரன்கள் குறைவாக பெற்ற பட்சத்தில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிக் கொண்டோம். பாக். அணியினர் அதிரடியாக ஆடி, டிக்ளேர் செய்து, இந்தியா அதிக நேரம் நான்காவது இன்னிங்ஸ் ஆட வேண்டிய அவசியத்தையும் கூடுதலாக ஏற்படுத்தி விட்டார்கள்.

தற்போதைய ஸ்கோர் 63-3, இன்று சாயங்காலத்திற்குள் அல்ல.. நாளை மதியத்திற்குள் இந்தியாவை சுருட்டி விடுவார்கள்.

பாகிஸ்தானில் மற்றொரு தோல்வி (???). வாழ்த்துக்கள் பாக் அணிக்கு.

பின் குறிப்பு:

இதை எழுதி முடிப்பதற்குள் டெண்டுல்கரும் அவுட். இந்தியா இன்றே தோற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

0 Comments:

Post a Comment

<< Home