Tuesday, February 07, 2006

உலகக் கோப்பை- அணிகளின் தயார் நிலை

இன்னும் ஒரு வருடம் இருக்கிறது என்றாலும், அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்தங்களை துவக்கி விட்டதாக பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உலகக் கோப்பையை சாக்காக வைத்து கங்குலி, கும்ப்ளே யை ஓரம் கட்டியாகிவிட்டது. ஸ்ரீலங்காவில் ஜெய சூர்யாவை ஓரம் கட்டப்பார்த்தார்கள். ஆனால் அவர் மீண்டும் வந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். உண்மையாகவே அணிகள் உலகக் கோப்பைக்கான ஆயத்தங்களை துவக்கிவிட்டனவா? எந்த அணி தற்போதைய நிலையில் அதிக முனைப்புடன் இருக்கிறது? என்பதை இங்கு அலசிப்பார்க்கலாம்.

இந்தியா சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்ப்ட்டவுடன் ஒருநாள் ஆட்டத்தில் பல புதிய உத்திகளை கையாண்டுள்ளது. சாப்பலின் முதல் குறிக்கோள் -அணியின் ஆட்டநிலைகளில் இலகுத்தன்மையை ஏற்படுத்தி யார் வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப எந்த வரிசையிலும் ஆடலாம் என்ற நிலையை உருவாக்குவது. இதில் கணிசமான வெற்றியை சாப்பல் பெற்றுவிட்டார் என்று சொல்லலாம். ஆனாலும் அடிப்படையான பல தேவைகள் இன்னும் பூர்த்தியாகமால் இருக்கின்றன.

மேற்கிந்திய ஆடுகளத்தில் பந்து வீச இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம். முனாப் படேல் மற்றும் நம்மால் அறியப்படாத பந்து வீச்சாளர் யாராவது இருந்தால் அவர்களை கண்டுபிடித்து, இந்திய அணிக்கு பங்களிக்கச் செய்வது அவசியம்.

இரண்டாவது தேவை , பத்து ஓவர்களுக்கு பந்து வீசக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் ( அதாவது நான் - ரெகுலர் பவுலர், இலங்கை அணியின் ஜெயசூர்யா, மேற்கிந்திய தீவின் கிரிஸ் கெய்ல் போன்று பந்து வீசக் கூடிய ஆட்டக்காரர்கள். சச்சின் டெண்டுல்கர் முன்பு இப்பணியை செய்தாலும் தற்போது அவரால் செய்ய இயலுமா? என்பது சந்தேகமாக உள்ளது. யுவராஜ் சிங்/சேவாக் அல்லது ரைனா -இவர்களுள் யாராவது இப்பணிக்கு தயார் செய்யப்பட வேண்டும்.

மற்றொரு முக்கிய அம்சம்- உலகக் கோப்பை வரை திராவிட் கேப்டனாக இருப்பாரா? என்பதும் உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். உலகக் கோப்பையின் போது ஒரு புதிய கேப்டனை நிர்ணயிக்கக் கூடாது. ஆராய்ந்து பார்க்கும் போது இந்தியா மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் நிறைய உள்ளன.

பாகிஸ்தான் தயார் நிலையில் இந்தியாவைக் காட்டிலும் முண்ணனியில் உள்ளது. இந்தியாவுடனான தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை முடியும் வரை இன்சமாம் கேப்டனாக இருப்பது உறுதியாகி விடும்.பந்து வீச்சில் அக்தரை மட்டும் சார்ந்திராமல் , ஆசிப், நவீத் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள் உருவாகி விட்டார்கள். யூனிஸ்கான், முகமது யூசுப் நடுவரிசையை கவனித்துக் கொள்வார்கள். அப்ரிதி தற்போது மூளையை உபயோகித்து விளாசுகிறார். அப்துல் ரஜாக் சூழ்நிலைக்கேற்ப அதிரடியாகவோ அல்லது நிதானமாகவோ ஆடக் கூடியவர். நாளையே உலகக் கோப்பை நடத்தினால் கூட, ஆடக்கூடிய நிலையில் உள்ள அணி பாகிஸ்தான்.

ஆஸ்திரேலியா சென்ற உலகக் கோப்பை அணியுடன் ஒப்பிடும் போது பல ஆட்டக்காரர்களை இழந்து விட்டது. ஹேடன், ஆண்டி பிக்கேல் , கில்லஸ்பி ஆகியோர் தற்போது ஒருநாள் அணியில் இல்லை. மெக்ராத் கூட ஆட இயலாத நிலையில் உள்ளார். மைக்கேல் பேவன் ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் தன் முதல்நிலையை இழக்காமல் உள்ளது ஆஸ்திரேலியா. இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் கட்டமைப்பின், நிர்வாகத்தின் வெற்றி என்றே நான் கூறுவேன். மைக்கேல் பேவனை காட்டிலும் அதிரடியாக ஆடக்கூடிய மைக்கல் ஹஸ்சி என்ற ஆட்டக்காரர் தற்போது அணியில் இடம் பெற்றுள்ளார். ஸ்டூவர் கிளார்க், லூயிஸ், ஹோப்ஸ், சான் டெய்ட் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள். யாராவது ஒரு பந்து வீச்சாளருக்கு அடிபட்டாலும் அவரை பேக் அப் செய்ய இன்னொரு ஆட்டக்காரர் தயாராக இருக்கிறார்.
நம் ஊரில் சச்சினை வெளியேற்ற் வேண்டும் என்று சொல்பவர்கள் கூட மாற்று ஆட்டக்காரர்களை அடையாளம் காட்ட பயப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஹடைனை ஓரம் கட்டி விட்டார்கள். அவரது இடத்தை அதே திறனுடன் நிரப்ப ஒருவர் அல்ல... பலர் தயாராக இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை பைனலில் ஆடக்கூடிய அணியாக ஆஸ்திரேலியாவை எப்போதும் சுட்டிக் காட்டலாம். அவர்கள் தனக்கென்று ஒரு பெஞ்ச் மார்க் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

(தொடரும்)

0 Comments:

Post a Comment

<< Home