Monday, February 13, 2006

பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள்

முதல் ஒருநாள் போட்டி பெஷாவரில் நடைபெற்றது. டாஸில் ஜெயித்த பாகிஸ்தான் இந்தியாவை பேட்டிங் செய்ய வைத்தது. டெண்டுல்கர் சதமடித்தார். பதான், தோனி இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். டெண்டுல்கர் ஆரம்பத்தில் டெண்டெடிவாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து நன்றாகவே விளையாடினார்.

ஆனால் மிடில் ஆர்டர் முழுவதுமாக சொதப்பியது. யுவராஜ், திராவிட், காயிஃப் மூவரும் நின்று விளையாடி நிறைய ரன்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. விளைவாக 350க்கு மேல் இந்தியா எடுத்திருக்கலாம். அதற்கு பதில் 328 ஆல் அவுட் என்ற நிலை.

பதிலுக்கு பாகிஸ்தானின் சல்மான் பட் (சதம்), ஷோயப் மாலிக் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து விரட்டினார்கள். அப்பொழுதே பாகிஸ்தான் ஜெயிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளது தெளிவானது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தவண்ணமே இருந்தன. இன்ஸமாம் obstructing the field என்ற முறையில் அவுட்டானார். இது ஆட்டத்துக்குப் பிறகும்கூட சில நாள்கள் பெரிதாகப் பேசப்பட்டது. யூனுஸ் கானும் நவீத்-உல்-ஹசனும் சேர்ந்து கடைசியில் சில ரன்களைப் பெற்று அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்தார்கள். அப்பொழுது பாகிஸ்தான் 47 ஓவர்களில் 311/7 என்ற ஸ்கோரில் இருந்தது. ஆனால் வெளிச்சம் போய்விட்டதால் ஆட்டத்தை நிறுத்தவேண்டிய நிலைமை. டக்வொர்த் - லூவிஸ் முறையில் பாகிஸ்தான் 7 ரன்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்கோர்கார்ட்

இரண்டாம் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் இங்கும் டாஸில் ஜெயித்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பதான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். அதன்பின்னர் ஒரு ரன் அவுட், ஜாகீர் கானுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஷோயப் மாலிக் இந்த ஆட்டத்திலும் நன்றாக விளையாடினார். யூனுஸ் கானுடன் சேர்ந்து மிக முக்கியமான 102 ரன்களைச் சேர்த்தார். மாலிக் முதல் ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் எடுத்திருந்தார். இப்பொழுது 95 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மாலிக், யூனுஸ் இருவரும் அவுட்டானதும் பிறரால் அதிகமாக ரன்களைச் சேர்க்க முடியவில்லை. 265 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.

இந்தியாவின் பதிலடி மிகச் சிறப்பாக அமைந்தது. சேவாக் நவீத்-உல்-ஹஸன் வீசிய ஒரு பவுன்சரை அப்பர்-கட் அடித்து பாயிண்ட்டுக்கு மேல் சிக்ஸ் அடித்தார். அப்பொழுது தோள் இழுத்துப் பிடித்துக் கொண்டது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் முதுகுப் பட்டை, தோள் என்று மருந்தைப் பூசிவிட்டார். அடுத்த பந்தை முன்காலில் சென்று தடுத்தாடினார் சேவாக். பந்து தரையில் பட்டு எழும்பி, பந்துவீச்சாளரில் தலைக்கு மேல் பறந்து லாங் ஆனில் எல்லைக்கோட்டைக் கடந்தது! அடுத்த இரண்டு பந்துகள் - ஒன்று மிட்விக்கெட் திசையில், மற்றொன்று கவர் திசையில் நான்குகள். ஆனாலும் சேவாக் முகத்தில் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.

தோள்வலியோடே சேவாக் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து விளாசினார். டெண்டுல்கர் இங்கும் முதலில் தடுமாறி, பின்னர் சுதாரித்து விளையாடினார். ஆனால் தன் அரை சதத்தை நெருங்கியபோது விக்கெட்கீப்பரிடம் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அதற்குள் இந்தியாவுக்குத் தேவையான ரன்ரேட் ஐந்துக்குக் கீழே வந்துவிட்டது. இப்பொழுது திராவிட் விளையாட வந்தார். சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றதும் பொறுமையாக விளையாடினார். ஆனால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். திராவிட், யுவராஜ் இருவரும் அமைதியாக விளையாடி 118 ரன்களைச் சேர்த்தனர். திராவிட் தன் அரை சதத்துக்குப் பின்னர் அவுட்டானாலும் யுவராஜ் கடைசிவரையில் நின்று இந்தியாவுக்கு எளிதாக வெற்றியை வாங்கிக் கொடுத்தார்.

பதானுக்கு ஆட்ட நாயகர் விருது கொடுத்தார்கள். ஆனால் சேவாகுக்குக் கொடுத்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

ஸ்கோர்கார்ட்

1 Comments:

Anonymous Anonymous said...

Dear Badri,
Pls Keep writing on criket.

Who was the Man of the match' in Peshawar?

I agree, Shewag should be selected in Rawalpindi
- A.J

1:47 AM  

Post a Comment

<< Home