Sunday, December 11, 2005

வாஸ் 300 விக்கெட்டுகள்

இரண்டாவது இன்னிங்ஸிலும் வாஸ் கவுதம் கம்பீரை எல்.பி.டபிள்யூ அவுட் செய்து டெஸ்ட் வாழ்க்கையில் தன் 300வது விக்கெட்டைப் பெற்றார்.

இரண்டு அணிகளும் ஆளுக்கொரு தடவழியை (strategy) முன்வைத்தனர். முதல் இன்னிங்ஸில் திராவிட் ஆட்டத்தைத் தொடங்க வேண்டியிருந்தது. இம்முறை இர்ஃபான் பதானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினார்கள். பதான், தோனி ஆகியோர் முதல் இன்னிங்ஸில் முரளிதரன் பந்துவீச்சில் மிகவும் சிரமப்பட்டனர். பதானை முன்னதாக அனுப்பியதன் மூலம் அவர் வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக சமாளித்து அதன்மூலம் இந்தியாவுக்கு முக்கியமான சில ரன்களைப் பெற்றுத்தருவார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இலங்கை தன் தடவழியாக இரண்டாவது ஓவரிலேயே முரளியைப் பந்துவீச அழைத்தனர். இது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. முரளியால் புதுப்பந்தை வழுக்காமல் சரியாகப் பிடித்துச் சுழல வைக்க முடியும் என்று தோன்றவில்லை. கொஞ்சம் அளவு குறைந்தாலும் கூடினாலும் காட்டமாகத் தண்டிக்கப்படுவார்.

பதானைத் தொடக்க ஆட்டக்காரராகக் கொண்டுவந்தபின் திராவிட் 3-ம் இடத்தில் வராமல் லக்ஷ்மணை அனுப்பியது ஏன் என்று புரியவில்லை. டெண்டுல்கர் 4-ம் இடத்தை விட்டு நகர மாட்டார். இதனால் திராவிட் 5-ம் இடத்திலும் கங்குலி 6-ம் இடத்திலும் யுவராஜ் 7-ம் இடத்திலும் வரவேண்டும்! இதனால் இந்த ஆட்டத்தில் பெரிய பிரச்னை இல்லை - ஒருவேளை யுவராஜ், கங்குலியை முன்னால் அனுப்பி கொஞ்சம் ஆக்ரோஷமாக அடித்தாடச் சொல்லலாம். தோனியைக் கூட முன்னதாக அனுப்பலாம். எப்படியும் 220 ரன்கள் முன்னணியில் இருந்தால்தான் இந்த ஆட்டத்தை ஜெயிக்க எளிதாக இருக்கும். முடிந்தால் 300 ரன்களுக்கு மேல் கையிருப்பு வைத்திருப்பது நலம்.

0 Comments:

Post a Comment

<< Home