Sunday, March 12, 2006

இந்தியா ஜெயிக்குமா?

'நொண்டிக்குதிரை' என்று நான் அன்புடன் அழைத்த இங்கிலாந்து அணி முதலாம் டெஸ்டில் இந்தியாவை நொண்ட வைத்தது.

புத்தம் புதியவர்களான தொடக்க ஆட்டக்காரர் அலிஸ்டார் குக், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசார் இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். குக் ஒரு சதம் அடித்தார். பனேசார் இந்தியாவின் மிக முக்கியமான சில விக்கெட்டுகளைப் பெற்றார்.

ஹோக்கார்ட் மிக நன்றாகப் பந்து வீசினார். ரிவர்ஸ் ஸ்விங் மூலம் இந்தியர்களைத் திணற வைத்தார். இந்தியாவுக்காக புதியவர் ஸ்ரீசாந்த் நன்றாகப் பந்து வீசினார். வாசிம் ஜாஃபர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாக விளையாடினார். இரண்டாம் இன்னிங்ஸில் சதமடித்தார். கடைசி இன்னிங்ஸில் திடீரென இந்தியா ஆட்டத்தை ஜெயிக்க எடுத்த முயற்சிகள் மக்கள் மனத்தைக் கவர்ந்தன. ஆனாலும் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் பின்னடைவுதான்!

இரண்டாம் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் பெற்றது. கெவின் பியட்டர்சன், ஃபிளின்டாஃப் இருவருமே நன்றாக விளையாடினார்கள். இந்தியாவின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. மூன்றாம் நாள் காலை முனாஃப் படேல் வீசிய முதல் ஓவரில் ஃபிளிண்டாஃப் கொடுத்த எளிதான கேட்சை திராவிட் நழுவ விட்டார். ஃபிளிண்டாஃப் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்களைப் பெற்றார். கும்ப்ளே ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்று இங்கிலாந்து அணியை ஆல் அவுட்டாக்கினார். இவற்றுள் இவரது 500வது விக்கெட்டும் அடங்கும்.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா மோசமாக விளையாடியது. திராவிட் ஒருவர்தான் நின்று விளையாடினார். திராவிட்-பதான் ஜோடி சேர்ந்து ரன்கள் பெற்றிராவிட்டால் இந்தியாவின் கதி அதோகதிதான். பின் பதான் - கும்ப்ளே; கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடிகள் சேர்ந்து அணியை இங்கிலாந்து ஸ்கோரைவிட அதிகத்துக்குக் கொண்டுசென்றன. இந்தியா 338 ஆல் அவுட். இந்த 38 ரன்கள் மிக முக்கியமானவை.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பம் முதற்கொண்டே பிரச்னையைச் சந்தித்தது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. குக் படேலின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கும்ப்ளே பந்தில் ஸ்டிரவுஸ் மட்டையில் பட்டு, அவரது ஷூ நுனியில் பட்டு, பேடில் பட்டு மேலே எழும்பியதை தோனி ஓடிவந்து பிடித்தார். பியட்டர்சன் ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் கையுறை அல்லது முன்கையில் பட்டுப்போனதை திராவிட் பிடித்தார். பியட்டர்சன் சந்தோஷமாக இல்லை. காலிங்வுட் ஸ்லிப்பில் நின்ற திராவிட் கையில் எளிமையான கேட்சைக் கொடுத்தார். நாளின் இறுதியில் பெல் கும்ப்ளேயை கட் செய்யப்போய் விக்கெட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இங்கிலாந்து 112/5 என்ற நிலையில் இருந்தது.

இன்று காலை முனாஃப் படேல் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். இன்றுதான் கடைசி நாள். இப்பொழுது இங்கிலாந்து 158/8 என்ற ஸ்கோரில் உள்ளது. ஃபிளிண்டாஃப் இன்னமும் அவுட்டாகவில்லை. இப்பொழுதைக்கு இங்கிலாந்தின் லீட் 120 ரன்கள். இன்னமும் 30 ரன்களுக்குள் இங்கிலாந்தை இந்தியா ஆல் அவுட் ஆக்கினால் இந்தியா ஜெயிக்க வாய்ப்பு உள்ளது.

0 Comments:

Post a Comment

<< Home