Tuesday, February 28, 2006

நொண்டிக்குதிரை இங்கிலாந்து

நாளை நாகபுரியில் நடக்கப்போகும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது.

இங்கிலாந்து 11 ஆட்டக்காரர்களை எப்படியாவது நிறுத்துமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வா(க்)ன் கால் முட்டியில் பிரச்னையுடனே இந்தியாவரை வந்துள்ளார். ஓர் ஆட்டத்துக்குப் பிறகே இனி தன்னால் விளையாட முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார். இப்பொழுது மீண்டும் இங்கிலாந்து சென்று உடம்பை கவனித்துக்கொள்ளவேண்டும்.

இங்கிலாந்து துணைத்தலைவர் மார்கஸ் டிரெஸ்கோத்திக் அடுத்து அணித்தலைவராக ஆகியிருக்கவேண்டும். இதே நிலைதான் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் போதும் ஏற்பட்டது. அப்போதே ஆச்சரியம் தரத்தக்கவகையில் தன் மனைவிக்குத் தொலைபேசியில் பேசி தான் இங்கிலாந்து கேப்டனாக இருக்கலாமா என்று கேட்டு கலந்தாலோசித்தாராம். அதற்குப் பிறகுதான் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டாராம். ஆனால் இங்கே போர்ட் பிரெசிடெண்ட் அணியுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது டிரெஸ்ஸிங் ரூமில் உடைந்துபோய் அழுதிருக்கிறார். உடனே அடுத்த விமானத்தில் ஏறி அவரும் இங்கிலாந்து சென்றுவிட்டார். ஏதோ 'வீட்டில் பிரச்னை' போலிருக்கிறது. வெளியே சொல்லமுடியாத அளவுக்கு பெர்சனலான பிரச்னை.

சரி, யாரைப் பிடிக்கலாம் என்று பேசி ஆண்டிரூ ஃபிளிண்டாஃபை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், கெவின் பியட்டர்சன் - பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக நன்றாக பேட்டிங் செய்த மிடில் ஆர்டர் வீரர் - போர்ட் அணிக்கு எதிராக விளையாடியபோது முதுகைப் பிடித்துக்கொண்டார். இவர் முதல் டெஸ்டில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.

வேகப்பந்து வீச்சாளர் சைமன் ஜோன்ஸ் முழங்காலை சுளுக்கிக் கொண்டார். அவரும் இந்தத் தொடரில் இனி பங்குகொள்வது கடினம்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஹார்மிசன், ஹோக்கார்ட் இருவரும் போர்ட் பிரெசிடெண்ட் அணிக்கு எதிராக உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஃபிளிண்டாஃபும் இன்னமும் ஃபார்முக்கு வரவில்லை.

அடுத்து சுழற்பந்து வீச்சாளர்கள். ஆஷ்லி கைல்ஸ் காயம் காரணமாக இந்தியாவுக்கு வரவில்லை. இவர்தான் அணியின் முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர். இயான் பிளாக்வெல், மாண்டி பனேசார், ஷான் உதால் ஆகியோர் எந்த அளவுக்கு இந்திய மட்டை வீரர்களைக் கஷ்டப்படுத்துவார்கள் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

இந்த இங்கிலாந்து அணி போர்ட் பிரெசிடெண்ட் அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதைவிட மோசமான அடி நாளை காத்திருக்கிறது!

1 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

//இந்த இங்கிலாந்து அணி போர்ட் பிரெசிடெண்ட் அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதைவிட மோசமான அடி நாளை காத்திருக்கிறது!//

இப்படிச் சொல்லியே நம்ம ஆளுங்களை நல்லா ஏத்தி விட்டுருங்க!
அப்புறம் ரணகளம் ஆகறது யாருன்னு நாளைக்குப் பார்ப்போம்.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

7:23 AM  

Post a Comment

<< Home