Monday, December 19, 2005

வாலாட்டும் இந்தியா முன்னிலையில்

இந்தியா இதற்கு முன் இப்படி வாலாட்டியதில்லை. முதல் ஆறு பேர் எடுப்பது மட்டும்தான் ரன்கள். அடுத்த ஐவரும் ஏதோ கொஞ்சம் ரன்களுடன் அவுட்டாகி விடுவார்கள். நமக்கெல்லாம் மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தானைப் பார்த்தாம் பொறாமையாக இருக்கும்.

ஆனால் இந்த டெஸ்டில் முதல் ஐந்து விக்கெட்டுகளும் 97க்கு விழுந்தவுடன் லக்ஷ்மனுடன் ஜோடி சேர்ந்து தோனி, பதான் இருவரும் 211 ரன்கள் பெற்றனர். இதில் லக்ஷ்மணின் பங்கு குறைவுதான்! லக்ஷ்மண் அவுட்டானபிறகும்கூட பதான் - அகர்கர், அகர்கர் - கும்ப்ளே, கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடிகள் சேர்ந்து 90 ரன்களைப் பெற்றனர். ஆக 97/5 என்ற நிலையிலிருந்து 301 ரன்கள் கடைசி ஐந்து விக்கெட்டுகளிடமிருந்து கிடைத்துள்ளன!

முன்னெல்லாம் டெண்டுல்கர், திராவிட் இருவரும் விளையாடுவதைப் பார்க்கும்போது இருவேறு எண்ணங்கள் மனத்தில் தோன்றும். டெண்டுல்கரின் விளையாட்டு பார்க்க மிக அழகாக இருக்கும்; ஆனால் எந்த நேரமும் அவுட்டாகிவிடுவாரோ என்று பயமாகவும் இருக்கும். அதே நேரம் டெண்டுல்கரே எல்லா பந்துகளையும் விளையாடக்கூடாதா என்றும் இருக்கும். மறுபக்கத்தில் திராவிட் விளையாடும்போது ஆட்டத்தில் ஒன்றுமே நடக்காதது போலவும் விக்கெட் ஏதும் இப்பொழுதைக்கு விழ வாய்ப்பில்லாதது போலவும் இருக்கும். ஆனால் ஆட்டத்தில் சுவாரசியமும் குறைவாகவே இருக்கும்.

தோனி, பதான் இருவரது விளையாட்டைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட இதே மாதிரியான உணர்வுகள்; சில வித்தியாசங்களுடன். தோனி எப்பொழுதும் ஏதாவது வாய்ப்புகளை எதிரணிக்குத் தருவதுபோலவே உள்ளார். ஆனால் அவரே எல்லாப் பந்துகளையும் விளையாடினால் நன்றாக இருக்கும் போல உள்ளது. பதான் விளையாடும்போது எதிரணிக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் பதான் (பழைய) திராவிட் போல விளையாடாமல் கவர்ச்சிகரமாகவும் விளையாடுகிறார்.

இலங்கையின் பதில் கிட்டத்தட்ட எதிர்பார்த்த விதமாகவே இருந்தது. புதியவர் உபுல் தரங்கா வெகு சீக்கிரமாகவே பதானிடம் அவுட்டானார். 14/1. அடுத்து சங்கக்காரவும் அட்டபட்டுவும் நன்றாக விளையாடினார்கள். ஆனால் ஒரு விக்கெட் விழுந்தால் இலங்கை சிதறிவிடும் என்ற எண்ணம் நமக்கு இருந்தவாறே இருந்தது.

அந்த விக்கெட் 100வது டெஸ்ட் விளையாடும் கும்ப்ளேயிடமிருந்து வரவில்லை. 50வது டெஸ்டில் விளையாடும் ஹர்பஜன் சிங்கிடமிருந்து வந்தது. ஹர்பஜன் இந்த ஆடுகளத்தில் நல்ல எழும்புதலைப் பெற்றார். அதில் ஏமாந்த அட்டபட்டு பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்திலேயே மற்றுமொரு எழும்பி வந்த பந்தில் ஏமாந்த ஜெயவர்தனே ஃபார்வர்ட் ஷார்ட் லெக் மொஹம்மத் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார். சமரவீராவும், அப்படியே அவுட்டானார். கடைசியாக சங்கக்கார கால் வழியாக ஹர்பஜன் பந்தில் பவுல்ட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது இலங்கை 40 ஓவர்களில் 131/5. ஹர்பஜன் 11-3-24-4 என்றால் கும்ப்ளே அதற்கு முற்றிலும் மாறாக 13-2-50-0! எல்லா நாள்களும் எல்லோருக்கும் தீபாவளியாக இருக்க முடியாது!

முக்கியமாகச் சொல்லவேண்டியது அகர்கரின் வெகு சாதாரண பந்துவீச்சு.

இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் இந்தியா மீண்டும் வெற்றி வாய்ப்பை நோக்கிச் செல்கிறது. இலங்கை ஃபாலோ-ஆனைத் தவிர்க்குமா என்று வர்ணனையாளர்கள் கேட்கின்றனர். ஆனால் இந்தியா ஃபாலோ-ஆனை விதிக்காது; மீண்டும் பேட்டிங் செய்து இலங்கைக்கு 450க்கு மேல் இலக்கை நிர்ணயிக்கும் என்றே நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் நான்காவதாக விளையாட இந்தியா விரும்பாது.

0 Comments:

Post a Comment

<< Home