Thursday, August 03, 2006

இலங்கை கிரிக்கெட் முத்தரப்பு தொடர் முன்னோட்டம்

இலங்கை, தென்னாப்ரிக்கா, இந்திய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் இலங்கையில் துவங்க உள்ளது. இத்தொடருக்கான, முன்னோட்டமே இந்த பதிவு.


இலங்கையில் உள்நாட்டு போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அணி வீரர்களுக்கான பாதுகாப்புகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகரித்திருக்கும் என நம்பலாம். தொடரின் அனைத்து போட்டிகளுமே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இங்குதான் மாவீரர் மட்டையாளர் சேவக் 69 பந்துகளில் சதமடித்தார், நியுசிலாந்து அணிக்கு எதிராக.


இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், இந்தியா கடந்த காலங்களில் அவ்வளவாக சோபிக்க வில்லை. அக்குறையை இந்தியா இத்தொடரில் நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதே என் போன்ற ரசிகர்களின்
எதிர்பார்ப்பு.


இலங்கை, இழந்த சக்தியை கொஞ்சம் மீட்டிருக்கிறது போல் தெரிகிறது. இங்கிலாந்தில், நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி புது வேகம் பெற்றிருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும், முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.


பொதுவாகமே, உள்நாட்டில், சுழலுக்கு சாதகமான மெதுவான ஆடுகளங்களில், இலங்கை சிறப்பாக விளையாடும். இம்முறையும் பெயரைத் தக்கவைத்துக் கொள்ள, இலங்கை கடுமையாக போராடும்.


அட்டப்பட்டு, வாஸ் இருவருமே முத்தரப்பு தொடருக்கு சந்தேகம்தான். இருப்பினும் ஜெயவர்த்தனே, சங்ககரா, முரளிதரன் போன்றோர் சிறந்த பார்மில் உள்ளனர். ஜெயசூர்யா, இந்திய அணிக்கு எப்போதுமே சிம்ம சொப்பனம்தான். இந்தியாவில் நடந்த சென்றைய தொடரில் சோபிக்காததற்கு பழிவாங்க, இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்.


சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை, இந்தியா 6-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. ஆனால், சென்ற மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் அந்நாட்டுக்கெதிராக நடந்த தொடரை 1-4 என்று பரிதாபமாக தோற்று திரும்பியுள்ளது இந்திய அணி. ஆதலால், இத்தொடரை வென்று வெற்றிப் பாதையில் மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.


டெண்டுல்கர் அணிக்கு திரும்பியிருப்பது நன்மையளிக்கும். சேவக், இழந்த பார்மை, மேற்கிந்திய தீவுகளில் ஓரளவு மீட்டுள்ளார். பதானின் பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு அவசியம். மேற்கிந்திய தீவுகளில் தொடரை தோற்றதற்கு பதான், யுவராஜ் மற்றும் இளம்புயல் தோனியும் சோபிக்காததே காரணம். இந்த கூட்டணி இலங்கையில் பிரகாசித்தால் இந்தியா இலங்கைக்கு கடுமையான போட்டியை கொடுக்கும்.


சுழலில் ஹர்பஜன், முரளி கார்த்திக், ரமேஷ் பவார் போன்றோருடன், சேவக்கும், யுவராஜ் சிங்கும், டெண்டுல்கரும் கூட பங்களிப்பார்கள். வேகப்பந்து வீச்சில் பதான், ஸ்ரீசாந்த், முனாப் படேல் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அணியில் கங்குலி இடம் பெறுவாரா என்று ஒவ்வொரு தொடருக்கு முன்பும் விவாதங்கள் கிளம்புகின்றன. கங்குலி ஓய்வு பெற்று விட்டு, வர்ணணையாளராக வந்து விடலாம். டெண்டுலகரும், டிராவிட்ட்டும் 50 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழந்தால், கமெண்ட்டரியில் கிழி, கிழியென்று கிழிக்கலாம். யோசியுங்கள் வங்காள இளவரசரே, கொழும்பு உங்களுக்காக காத்திருக்கிறது !!


தென்னாப்ரிக்காவை பொறுத்த வரை கேப்டன் ஸ்மித், கிப்ஸ், காலிஸ் போன்றவர்கள் இல்லாமல் அணி பாதி பலத்துடன் காணப்படுகிறது. நிடினி, போயே பந்துவீச்சில் இந்திய, இலங்கை அணிகளை சந்திக்க சற்று கஷ்டப்படத்தான் வேண்டும்.


இறுதிப் போட்டியில் இலங்கை, இந்திய அணிகளை எதிர் பார்க்கலாம் !

4 Comments:

Blogger கார்த்திக் பிரபு said...

sariyaaga sonnergal finalil indiaya srilanka thaan varum kadasiyil indhiya thorru pogum..idhu thaan eppavum nadakum koothu

10:35 PM  
Anonymous Anonymous said...

India must boycott this series for the human rights violations by SL. SriLanka should cancel this tournament and concentrate on its political issues. Its a shame to play over dead bodies :(

2:59 AM  
Anonymous Anonymous said...

India must boycott this series for the human rights violations by SL. SriLanka should cancel this tournament and concentrate on its political issues. Its a shame to play over dead bodies :(

2:59 AM  
Blogger பழூர் கார்த்தி said...

பார்ப்போம் கார்த்திக் பிரபு, இந்த முறையாவது இறுதிப்போட்டியில் இந்தியா வெல்கிறதா என்று !!

***

அனானி, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது.. எனினும், அமைதி விரைவில் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம்...

1:27 AM  

Post a Comment

<< Home