Tuesday, August 22, 2006

டேரல் ஹேர் (vs) பாகிஸ்தான்

லோக்கல் கிரிக்கெட்டில் அடிக்கடி இப்படி நடக்கும். நன்றாக காஜி ஆடிவிட்டு ஏதேனும் சப்பை காரணங்களுக்காக பந்து வீச மறுப்பதும், விளையாடும் இரு அணிகளில் தனக்கு பிடிக்காத அணிக்கெதிரான தீர்ப்புகளை அம்பயர் வழங்குவதும் மிகச்சாதரண விஷயம். ஆனால் ஒரு சர்வதேச ஆட்டத்தில் இப்படி நடந்தால் ...

அப்படித்தான் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் போட்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் 173 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி பதிலுக்கு 504 ரன்கள் எடுத்து வலுவான நிலையெடுத்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சின் போது பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக கூறி வேறொரு பந்தினை தேர்ந்தெடுக்க முடிவு செய்த நடுவர் டேரல் ஹேர் பாகிஸ்தானின் ஸ்கோரில் ஐந்து ரன்களை பெனால்டியாக குறைக்கவும் செய்தார் இங்கிலாந்திற்கு ஐந்து ரன்கள் வழங்கினார். தேநீர் இடைவேளையின் போது பெவிலியனுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினர் மீண்டும் மைதானத்துக்குள் வராமல் தங்கள் எதிர்ப்பை காட்டினர். சிறிது நேர குழப்பத்துக்கு பின்னர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக எதிரணி ஆடுகளத்துக்கு வராததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்து வெளியேறினர். இதற்குள் சமாதனமடைந்த பாகிஸ்தான் அணி ஆடுகளத்துக்கு திரும்பினால் நடுவர்கள் வரமறுத்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவித்தது இறுதி முடிவு என அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் கேவலமான ஒரு நிகழ்வு அரங்கேறியது.

ஆடுகளத்தை பொறுத்தளவில் நடுவரின் தீர்ப்பு இறுதியானது என்பதும், அவ்வாறே அவர் முடிவில் ஏதேனும் வேறுபாடுகள் ஆட்டம் முடிந்தவுடன் முறைப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடன் கொண்டு செல்வதுதான் முறையான நடவடிக்கையாக இருந்திருக்கும். இதனை விடுத்து சிறுபிள்ளைகள் போல அறையில் அமர்ந்து கொண்டு வரமறுப்பது, கிரிக்கெட்டை அவமதிப்பது மட்டுமன்றி, போட்டியைக்காண நேரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பை பார்த்த இலட்சக்கணக்கான ரசிகர்களையும் அவமதிப்பதற்கு சமமாகும். இந்த வகையில் பாகிஸ்தான் அணி மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை ஒரு முக்கிய முன்னுதரணமாக திகழும்.

அதேவேளையில் ஆடுகள் நடுவர்களின் தீர்ப்புகள் குறித்தும் அதிகாரங்கள் குறித்தும் சமீப காலங்களாகவே பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆட்டத்தின் போது தவறாய் அளிக்கப்படும் ஒரு சிறு தீர்ப்பும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் சூழலில் நடுவர்களின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை எழும்பியிருக்கிறது. குறிப்பாய் இந்த ஆட்டத்தில் அரங்கினுள் வைக்கப்பட்டிருந்த 26 கேமாரக்களிலும் பந்தை சேதப்படுத்திய காட்சி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சூழலில் நடுவர் அனுமானத்தின் அடிப்படையிலே இந்த தீர்ப்பை வழங்கியிருந்தால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பரபரப்புக்கு பேர் போன நடுவர் டேரல் ஹேர், ஆசிய நாடுகளுக்கு எதிராய் கடுமையான தீர்ப்புக்களை வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. (முரளிதரனின் பந்து வீசும் முறையை குறையிருப்பதாக கூறி தொடர்ந்து நோபால்களை இவர் வழங்க, இலங்கை அணி ஆடுகளத்திலேயே கடும் எதிர்ப்பை முன்பொரு முறை கிளப்பியது). சேதமடைந்த பந்து மாற்றப்படும் போது அணித்தலைவர் என்ற முறையில் தன்னிடம் தெரிவிக்கப்ப்டவில்லை என்று இன்சமாம் குற்றம்சாட்டுகிறார். இது விதிக்கெதிரானது என்றபோதில் நடுவர்(கள்) மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படபோகிறது என்பதும் மிக முக்கியமான கவனிக்கப்படவேண்டிய விஷயம்

இப்போதைக்கு நடுவரின் தீர்ப்புதான் இறுதியானது, அதனால் பாகிஸ்தான் அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்தாலும் மற்ற ஆசிய நாடுகளின் உதவியோடு கடுமையான நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் அணி தப்பிவிடும். அதிகபட்சமாக இன்சமாம் ஒரு டெஸ்ட் தொடர் அல்லது வருகின்ற ஒரு நாள் தொடர் முழுவதும் ஆட தடை செய்யப்படுவார். சுய சார்பற்ற எந்த அமைப்பும் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்பதற்கு ஐசிசி ஒரு உதாரணமாயிருக்கிறது (மற்றொரு உதா: ஐக்கிய நாடுகள் சபை).

இதெல்லாம் ஒருபுறமிருக்க ஆட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நான்காம் நாள் கட்டணத்தில் 40% சதவீகிதத்தையும், ஐந்தாம் நாள் கட்டணம் முழுவதையும் ரசிகர்களுக்கு திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறது. மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்களை விற்ற (மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்டுகளை போராடி வாங்கிய நம்மை ...) ஒரு பந்து கூட வீசப்படாத நிலையிலும் விதிமுறைகளின்படி கட்டணத்தை திருப்பித் தர இயலாது என அறிவித்த இந்திய கிரிக்கெட் சங்கங்கள், குறிப்பாய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இங்கிலாந்து போர்டிடம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது

Cross Posted in http://vicky.in/dhandora

Related Posts:

A lot of questions and no answers

பதிவு எண்:50. இப்படியும் ஜெயிக்கிறது இங்கிலாந்து...

Inzamam vs Darel Hair

Thursday, August 17, 2006

கைகொடுக்குமா SSC மைதானம்??

மிகவும் பரபரப்பான தொடராயிருக்கும் என எதிர்பார்த்த இலங்கை முத்தரப்பு தொடரை மழையும், குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் பாதித்து விட்டன. இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையிலேயான முதல் ஆட்டம் மழையால் தடைப்பட்டிருந்த சூழலில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடித்ததையடுத்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வீரர்களை நாடு திரும்ப அழைத்தது. மேலும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தொடரில் விளையாடக்கூடாது என்று தமிழ் புலிகள் என்ற இளைஞர் அமைப்பு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு குறித்த இலங்கை கிரிக்கெட் போர்டின் விளக்கம் திருப்தியளித்ததையடுத்து இந்தியா தொடரில் விளையாட தயக்கம் ஏதுமில்லை என்று அறிவித்த நிலையில் முத்தரப்பு தொடர் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடராக மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மழையினால் தேங்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்றும் வசதிக்காகவும் மூன்று ஆட்டங்களும் இலங்கை சிங்கள மைதானத்திலேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு என்பதற்கு முன்னுரிமை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது. உள்நாட்டு மோதல்கள் மீண்டும் பழைய உச்சகட்ட நிலையை அடைந்து கொண்டிருக்கும் சூழலில் விளையாட்டு போட்டிகள் தேவையா என்ற கேள்வியும் எழாமலில்லை. அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவின் திடீர் விலகல் கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆசிய நாடுகளில் ஆடும் போது மற்ற நாடுகள் கொஞ்சம் அதிகப்படியான பந்தா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுக்கிறது. இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு நடந்த பின்னரும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடி தொடரை நிறைவு செய்தது. உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையிலே தொடங்கிய டெஸ்ட் தொடரில் எந்த வித பாதுகாப்பு குறைபாடுமில்லாமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி குண்டுவெடிப்பையடுத்து ஒவர் ரியாக்ட் செய்திருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பு பிரச்சனை எனும்போது அதை இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேசி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயன்றிருக்கலாம். மாறாக இவ்வாறான அவசர நடவடிக்கையிலிறங்கி இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு அல்லாமல் மற்ற நாடுகளுக்கு தவறான தவறான சமிஞையையும் காட்டியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் போர்டு இந்த விவகாரத்தை பெருத்த நிதானத்துடன் சமாளித்திருக்கிறது ( இலங்கை கிரிக்கெட் போர்டின் ஆதரவு வேறு பல நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தேவைப்படுவதும் ஒரு காரணம் என்றாலும்)

நாளை மழை மட்டும் குறிக்கிடாமல் இருந்தால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாய் அமையும். இந்தியாவிற்கு எதிரான கடைசித்தொடரில் 6-0 6 - 1 என்ற ரீதியில் செம உதை வாங்கிய இலங்கை, கடைசியாக ஆடிய இங்கிலாந்து தொடரில் அபார வெற்றி பெற்றது. மாறாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்தியா பலம் குறைந்த மேற்கிந்திய தீவுகளிடம் 4 - 1 என்ற ரீதியில் உதைவாங்கியது. பழி வாங்க துடிக்கும் உள்நாட்டுப்புலி இலங்கை, மீண்டும் வெற்றியை தொடர் தொடர நினைக்கும் இந்தியா என போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் SSC மைதானம் இந்தியாவுக்கு இதுவரை மிகவும் சாதகமாயிருந்து வந்திருக்கிறது. (4/7) ஆறு மாதம் கழித்து மீண்டும் தலைவர் களத்திலிறங்குகிறார். சச்சினுக்கும் இதுவரை இந்த மைதானம் ராசியாகவே இருந்து வந்திருக்கிறது.(5 ஆட்டங்களில் 203 ரன்கள் (40.60)) கைகொடுக்குமா SSC மைதானம்??

Cross Posted in http://vicky.in/dhandora

Thursday, August 03, 2006

இலங்கை கிரிக்கெட் முத்தரப்பு தொடர் முன்னோட்டம்

இலங்கை, தென்னாப்ரிக்கா, இந்திய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் இலங்கையில் துவங்க உள்ளது. இத்தொடருக்கான, முன்னோட்டமே இந்த பதிவு.


இலங்கையில் உள்நாட்டு போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அணி வீரர்களுக்கான பாதுகாப்புகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகரித்திருக்கும் என நம்பலாம். தொடரின் அனைத்து போட்டிகளுமே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இங்குதான் மாவீரர் மட்டையாளர் சேவக் 69 பந்துகளில் சதமடித்தார், நியுசிலாந்து அணிக்கு எதிராக.


இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், இந்தியா கடந்த காலங்களில் அவ்வளவாக சோபிக்க வில்லை. அக்குறையை இந்தியா இத்தொடரில் நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதே என் போன்ற ரசிகர்களின்
எதிர்பார்ப்பு.


இலங்கை, இழந்த சக்தியை கொஞ்சம் மீட்டிருக்கிறது போல் தெரிகிறது. இங்கிலாந்தில், நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி புது வேகம் பெற்றிருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும், முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.


பொதுவாகமே, உள்நாட்டில், சுழலுக்கு சாதகமான மெதுவான ஆடுகளங்களில், இலங்கை சிறப்பாக விளையாடும். இம்முறையும் பெயரைத் தக்கவைத்துக் கொள்ள, இலங்கை கடுமையாக போராடும்.


அட்டப்பட்டு, வாஸ் இருவருமே முத்தரப்பு தொடருக்கு சந்தேகம்தான். இருப்பினும் ஜெயவர்த்தனே, சங்ககரா, முரளிதரன் போன்றோர் சிறந்த பார்மில் உள்ளனர். ஜெயசூர்யா, இந்திய அணிக்கு எப்போதுமே சிம்ம சொப்பனம்தான். இந்தியாவில் நடந்த சென்றைய தொடரில் சோபிக்காததற்கு பழிவாங்க, இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்.


சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை, இந்தியா 6-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. ஆனால், சென்ற மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் அந்நாட்டுக்கெதிராக நடந்த தொடரை 1-4 என்று பரிதாபமாக தோற்று திரும்பியுள்ளது இந்திய அணி. ஆதலால், இத்தொடரை வென்று வெற்றிப் பாதையில் மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.


டெண்டுல்கர் அணிக்கு திரும்பியிருப்பது நன்மையளிக்கும். சேவக், இழந்த பார்மை, மேற்கிந்திய தீவுகளில் ஓரளவு மீட்டுள்ளார். பதானின் பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு அவசியம். மேற்கிந்திய தீவுகளில் தொடரை தோற்றதற்கு பதான், யுவராஜ் மற்றும் இளம்புயல் தோனியும் சோபிக்காததே காரணம். இந்த கூட்டணி இலங்கையில் பிரகாசித்தால் இந்தியா இலங்கைக்கு கடுமையான போட்டியை கொடுக்கும்.


சுழலில் ஹர்பஜன், முரளி கார்த்திக், ரமேஷ் பவார் போன்றோருடன், சேவக்கும், யுவராஜ் சிங்கும், டெண்டுல்கரும் கூட பங்களிப்பார்கள். வேகப்பந்து வீச்சில் பதான், ஸ்ரீசாந்த், முனாப் படேல் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அணியில் கங்குலி இடம் பெறுவாரா என்று ஒவ்வொரு தொடருக்கு முன்பும் விவாதங்கள் கிளம்புகின்றன. கங்குலி ஓய்வு பெற்று விட்டு, வர்ணணையாளராக வந்து விடலாம். டெண்டுலகரும், டிராவிட்ட்டும் 50 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழந்தால், கமெண்ட்டரியில் கிழி, கிழியென்று கிழிக்கலாம். யோசியுங்கள் வங்காள இளவரசரே, கொழும்பு உங்களுக்காக காத்திருக்கிறது !!


தென்னாப்ரிக்காவை பொறுத்த வரை கேப்டன் ஸ்மித், கிப்ஸ், காலிஸ் போன்றவர்கள் இல்லாமல் அணி பாதி பலத்துடன் காணப்படுகிறது. நிடினி, போயே பந்துவீச்சில் இந்திய, இலங்கை அணிகளை சந்திக்க சற்று கஷ்டப்படத்தான் வேண்டும்.


இறுதிப் போட்டியில் இலங்கை, இந்திய அணிகளை எதிர் பார்க்கலாம் !